லக்னௌ: அதிகாரத்துக்காக சுயமரியாதையை விற்கத் துணிந்தவர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பாஜக பெண் எம்.எல்.ஏ ஒருவர் விமர்சித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் எலியும் பூனையுமாக இருந்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.
உத்தரபிரதேச ஆளும்கட்சியான பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங். இவர் லக்னௌவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை விமர்சித்துக் கூறியதாவது:
சுயமரியாதை என்ற ஒன்றைப் பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது. மகாபாரத காவியத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பின் பாஞ்சாலி பழிவாங்கும் எண்ணத்தை நோக்கித் திரும்பினார். ஆனால் மாயாவதியோ தற்போது அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார்.
மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறையாக உள்ளார்.
இவ்வாறு சாதானா சிங் பேசினார்.
அவரது இந்த கருத்து உ.பி அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.