லக்னௌ: உத்தர பிரதேசத்தில் 60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்கில் கும்பமேளா தற்போது விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு இனி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அதன்படி மாநில அரசின் முதியவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்பும் மாநிலம் முழுவதும் உள்ள சாதுக்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்துக்கொள்ள ஏதுவாக ஜனவரி 30 வரையில் மாநில அரசின் சார்பில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்த அறிவிப்பானது அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரத்தில் பாஜக அரசு எதிர்கொண்டு வரும் விமர்சனங்களை சமாதானம் செய்யும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.