கேளிக்கை விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் காயமடைந்த எம்.எல்.ஏ. ஆனந்த் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களை இழுக்க பாஜகவினர் மேற்கொண்டுள்ள முயற்சியைத் தடுக்கும் வகையில், பெங்களூரு அருகே பிடதியில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு பல்லாரி மாவட்டம், விஜயநகரா தொகுதியைச் சேர்ந்த ஆனந்த் சிங்குக்கும், கம்பளி தொகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.
இதில் ஆனந்த் சிங்குக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், டி.கே. சுரேஷ், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே ஆகியோர் தெரிவித்தனர்.
கேளிக்கை விடுதியில் தவறி விழுந்ததால் ஆனந்த் சிங் காயமடைந்தார் என்று காங்கிரஸ் எம்.எல்.சி ரிஸ்வான் தெரிவித்தார்.
அவர்களைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஜமீர் அகமதுகான் கூறியது:
கேளிக்கை விடுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த் சிங்குக்கு கண்ணில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதை ஊடகங்கள் பெரிதாக்கி வருகின்றன என்றார்.
மறியல்...: இதற்கிடையே, ஆனந்த் சிங் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பல்லாரி மாவட்டம், ஹொசப்பேட்டை கமலாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் டயர்களை கொளுத்தி மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.