என்னாது.. மீண்டும் அவரைக் காணவில்லையா?? அதிருப்தியில் கட்சியினர்!
ஏற்கனவே 60 நாட்கள் இந்தியாவை விட்டு வெளியேறி எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த முக்கியக் கட்சித் தலைவர், தற்போது மீண்டும் மாயமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.. ராகுல் காந்தியை மீண்டும் காணவில்லையாம்.. ஜனவரி 11ம் தேதி துபாய்க்கு சென்று இந்திய தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதன்பிறகு எங்கிருக்கிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி முழு வீச்சில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இன்னும் தொகுதிப் பங்கீடு பற்றிக் கூட பேச்சு வார்த்தை தொடங்கவில்லை என்பதில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல் எங்கிருக்கிறார் என்பது கூட பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் இப்படி கட்சித் தலைவர் தலைமறைவாகியிருப்பது சொல்லொணாத் துயரத்துக்கு ஆழ்த்தியுள்ளது.
கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தனது பயணம் மற்றும் தனது தாய் சோனியாவின் மருத்துவப் பயணம் குறித்துக் கூட சமூக தளங்களில் தகவல்களை பதிவிட்டு வந்தவர், தற்போதைய பயணத்தை மட்டும் அந்தரங்கமாக வைத்துள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணியை ராகுலும், சோனியாவும் புறக்கணித்துவிட்ட நிலையில், மூத்தத்தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கட்சி சார்பில் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி மாயமானது குறித்து பாஜகவினர் மீண்டும் விமரிசிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு கட்சியினர் பதிலடி கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.