வாரணாசி இந்தியாவின் திறமையை வெளிநாடுகளில் பரப்பும் தூதுவர்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
'பர்வாசி பாரதிய திவாஸ்' என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15-ஆவது ஆண்டு மாநாடு, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
'என்னைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நான் இந்தியாவின் எண்ணங்களை வெளிப்படுத்தும் தூதுவர்களாகதான் பார்க்கிறேன்.
அவர்கள் உண்மையில் இந்தியாவின் திறமையை உலகிற்கு பரப்பும் தூதுவர்களாகவும் செயல்படுகிறார்கள் .
இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் பல்வேறு நாடுகளில் தலைமைப் பதவி வகிக்கிறார்கள். குறிப்பாக மொரிஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்தியர்கள் முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்கு அரசு செலவு செய்யும் தொகையில் ஏறக்குறைய 85 சதவீதம் கொள்ளையடிக்கப்பட்டது.
தொழில்நுட்பம் முன்னேறியவுடன் 100 சதவீதமும் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆனால், நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிதியை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கி இருக்கிறோம்.
இதன்மூலம் இடைத்தரகர்களுக்கு பணம் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.