மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் தொடர்பான விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
மேலும், கூகுள் வலைதளத்தில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்கள் தொடர்பான விவரங்கள் குறித்தும், அதற்கு செலவிடப்படும் தொகை குறித்தும் தகவல் அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கான விதிமுறைகளைத் திருத்தியுள்ளோம். அதன்படி, கூகுள் வலைதளத்தில் விளம்பரங்கள் வெளியிட விரும்பும் அரசியல் கட்சிகள், அந்த விளம்பரங்களுக்குத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். இந்த விளம்பரங்கள் குறித்து கூகுள் நிறுவனமும் ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், கூகுள் வலைதளத்தில் விளம்பரங்கள் வெளியிடும் கட்சிகள் குறித்தும், அதனை வெளியிடுபவரின் அடையாளம் குறித்தும், விளம்பரங்களுக்குக் கட்சிகள் செலவிடும் தொகை குறித்தும் வரும் மார்ச் முதல் அறிக்கை வெளியிடப்படும். வாக்காளர்கள் சரியான தகவல்களைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடும் நபர்கள் குறித்தும், அதற்குக் கட்சிகள் செலவிடும் தொகை குறித்தும் வெளிப்படையாகத் தகவல் அளிக்கப்படும் என்று சுட்டுரை வலைதளமும், முகநூல் வலைதளமும் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.