புது தில்லி: விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக தங்கை பிரியங்கா காந்தியை நியமித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டிலேயே அதிக பட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 எம்.பி தொகுதிகள் அமைந்துள்ளன. இங்கு வெற்றி பெரும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இரு பெரும் கட்சிகளும் இங்கு அதிக அக்கறை காட்டி வருகின்றன.
முன்னதாக பழைய கசப்புகளை மறந்து பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக அறிவித்தன. உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக வலுவான கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
எனவே இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக தங்கை பிரியங்கா காந்தியை நியமித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு முன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் ப்ரியங்கா காந்தி மட்டும் பிரசாரம் செய்து வந்தார். தற்போது அவருக்கு காங்கிரஸ் தலைமை புதிய பதவியை வழங்கியுள்ளது.