பழைய வாக்குச்சீட்டு முறை என்ற பேச்சுக்கு இடமில்லை: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

மீண்டும் பழைய மாதிரி வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவது பிற்போக்கானது. வாக்குச் சீட்டு முறையில், வாக்குச்
பழைய வாக்குச்சீட்டு முறை என்ற பேச்சுக்கு இடமில்லை: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்


புதுதில்லி: மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மாட்டோம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில்நுட்ப வல்லுநர் சையது சுஜா என்பவர் கூறியியிருந்தார். 

இதையடுத்து தேர்தல் ஆணையம் சையது சுஜா மீது தில்லி காவல்துறையில் புகார் அளித்தது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்ற புகாரின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் 505 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கூறினர். 

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம், கேரள காங்கிரஸ் (மாணி), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்த கொண்டுவர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தலைமை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அனுமதி கோரியுள்ளது. பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப மாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியவர், தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவோம் என்றார். 

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு முறையும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார்.

இதுதொடர்பாக, அரசியல் கட்சிகள் உட்பட எந்தவொரு நபர்களிடமிருந்தும் நாங்கள் எந்தவொரு விமர்சனம் மற்றும் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். திறந்தமனதோடு அதனை பரிசீலிக்க நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். அதே நேரத்தில், நாங்கள் மிரட்டலினால், அச்சுறுத்தலினால் அல்லது அழுத்தங்களுக்கு அஞ்சி மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறையை கைவிட்டுவிட்டு  வாக்குச்சீட்டு ஆவணங்களின் சகாப்தத்தை ஆரம்பிக்க போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். 

மீண்டும் பழைய மாதிரி வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவது பிற்போக்கானது. வாக்குச் சீட்டு முறையில், வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவது, கள்ள வாக்குப் போடுவது போன்ற பிரச்னைகள் மீண்டும் எழும். இதனால் தேர்தல் களம் மீண்டும் வன்முறைக்கான இடமாக மாறும் அபாயம் உள்ளது மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவது பிற்போக்கான செயல்  என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com