விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டப் புகாரில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடியோகான் அலுவலகம், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நிர்வகித்து வந்த நுபவர் நிறுவனம் - மும்பை உட்பட 4 இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், விடியோ கான் நிறுவனர் வேணுகோபால், சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் அங்கம் வகித்த விடியோகான் நிறுவனத்துக்கு 2012ம் ஆண்டு விதிகளை மீறி ரூ.3,250 கோடி அளவுக்குக் கடன் வழங்கியிருந்தார்.
இந்த கடன் வழங்கப்பட்ட சில மாதங்களில் விடியோகான் பிரமோட்டர் வேணுகோபால் தூத் என்பவர், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த நுபவர் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும், 2009ம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தா கோச்சார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார்.