அலிகார்: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை மத்திய அரசு கையாண்டு வந்தாலும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடுமோ என்ற நிலையே நீடிக்கிறது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு யோகா குரு பாபா ராம்தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதாவது, இந்துவோ அல்லது முஸ்லிமோ யாராக இருந்தாலும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது.
அவ்வாறு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களின் ஓட்டுரிமை, வேலை, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை மத்திய அரசு பறித்து விட வேண்டும்.
இதில்லாமல், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கக் கூடாது.
2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை தரக் கூடாது.
அரசு பள்ளி, அரசு மருத்துவமனையை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
இதனை கட்டாயமாக்கினால் தானாகவே மக்கள் தொகை குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தால்தான் தன்னைப் போல் புகழ்பெற முடியும் என்றும், சாதனைகள் பல படைக்க முடியும் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.