புது தில்லி: சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை விசாரித்த அமர்வில் இருந்து நீதிபதி சிக்ரியும் விலகியுள்ளார்.
சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இருந்து ஏற்கனவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விலகிய நிலையில் இன்று நீதிபதி சிக்ரியும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிபிஐ இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு கடந்த 10ஆம் தேதி நியமித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமான காமன் காஸ் வழக்குத் தொடுத்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமர்வில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகோய் அறிவித்தார். சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநர் தேர்வுக் குழுவில் நானும் அங்கம் வகிக்கிறேன்; ஆதலால் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவின் பதவி குறித்து பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றக் கூட்டத்தில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் நீதிபதி சிக்ரியும் கலந்து கொண்டதால், விசாரணையில் இருந்து விலகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.