பாட்னா: அழகான முகம் இருந்தால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது என்று காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பிகார் அமைச்சர் ஒருவர்விமர்சித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக தங்கை பிரியங்கா காந்தியை நியமித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமையன்று உத்தரவிட்டார்.
இதற்கு முன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் பிரியங்கா காந்தி மட்டும் பிரசாரம் செய்து வந்தார். தற்போது அவருக்கு காங்கிரஸ் தலைமை புதிய பதவியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தியின் நேரடி அரசியல் பிரவேசத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்திருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் அழகான முகம் இருந்தால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது என்று காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பிகார் அமைச்சர் ஒருவர்விமர்சித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரியங்காவின் அரசியல் பிரவேசம் குறித்து பிகார் அமைச்சர் வினோத் நாராயண் ஜா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். ஆனால் அழகான முகத்தை வைத்திருந்தால் மட்டும் தேர்தலில் வாக்குகளை வென்றுவிட முடியாது.
ஊழல் புகார்களில் சிக்கிய ராபர்ட் வத்ராவின் மனைவிதான் பிரியங்கா காந்தி. இன்னமும் ராபர்ட் வதேரா மீது ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பிரியங்கா காந்தி அழகாக இருந்தாலும், அவர் அரசியல் ரீதியாக எதுவும் சாதிக்கவில்லை; அவருக்கு அரசியல் அறிவும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.