போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் இழப்பீடு

போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யூனியன் கார்பைடு நிறுவனத்திடமிருந்து கூடுதல் இழப்பீடு பெற்று தருவதற்காக, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரண

போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யூனியன் கார்பைடு நிறுவனத்திடமிருந்து கூடுதல் இழப்பீடு பெற்று தருவதற்காக, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
ரூ.7,844 கோடி கூடுதல் இழப்பீடு கோரும் அந்த  மனு மீது வரும் ஏப்ரல் மாதம் விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவன தொழிற்சாலையில், கடந்த 1984, டிசம்பர் 2-3ஆம் தேதி இரவில் "மெத்தில் ஐசோசயனேட்' எனும் விஷவாயு கசிந்தது. இதில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 
இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடந்த 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சீராய்வு செய்யக் கோரி, மத்திய அரசு சார்பில் கடந்த 2010-இல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "விஷ வாயு கசிவில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.750 கோடி இழப்பீடு வழங்குவதாக கடந்த 1989-இல் எட்டப்பட்ட உடன்பாடு, உண்மைக்கு புறம்பான தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, யூனியன் கார்பைடு நிறுவனம் கூடுதலாக ரூ.7,844 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. 
இந்த மனு மீது யூனியன் கார்பைடு நிறுவனம், அந்த வாங்கிய அமெரிக்காவின் டவ் கெமிக்கல் நிறுவனம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மெக்லௌட் ரஸ்ஸல் நிறுவனம், எவரெடி நிறுவனம் ஆகியவற்றுக்கு கடந்த 2011-இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில், இந்த விவகாரத்தை வரும் ஏப்ரல் மாதம் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
முன்னதாக, போபால் விஷவாயு வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனையை அதிகரிக்கக் கோரி, சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2010-இல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com