புது தில்லி: ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்பு நிலவி வந்த பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதுமுதல் கணிசமான அளவில் வரிவசூலில் ஏற்றம் காணப்படுகிறது
இந்நிலையில் ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் கிடைத்த நிலையில் ஜூன் மாதத்தில் 99 ஆயிரத்து 939 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் முந்தைய மாதத்தில் கிடைத்ததைவிட 350 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.
இந்த 99 ஆயிரத்து 939 கோடி ரூபாயில் மத்திய அரசுக்கு சேர வேண்டிய வரியாக 18,366 கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய வரியாக 18,366 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த வரியாக (இறக்குமதி வரிகள் 21,980 கோடி ரூபாய் உள்பட) 47,772 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
அதேபோல செஸ் வரியாக 8,457 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.