லோக்பால் அமைப்பு கடந்த மே மாதம் வரை 480 புகார்களை நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில், ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நோக்கில், லோக்பால் அமைப்பை மத்திய அரசு அண்மையில் அமைத்தது. லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் 8 பேர் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் வரை 480 புகார்களை லோக்பால் அமைப்பு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை, ஊழலோடு தொடர்பில்லாத புகார்கள் என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பில் புகார் தெரிவிப்பதற்கான படிவங்களை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
எனவே ஓய்வூதியம், பணி சார்ந்த பிரச்னைகள் மற்றும் குறைகள் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் சம்மந்தப்பட்ட துறையை அணுகவேண்டும் என்று லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழல் அல்லாத விஷயங்கள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டாம் என்பதை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது.