பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக மலை அடிவாரத்திலிருந்து 4,823 யாத்ரீகர்கள் அடங்கிய மூன்றாவது குழு அமர்நாத் யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.
3,880 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக இந்த ஆண்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் அமர்நாத் யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் இரண்டு குழுக்கள் முறையே ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் புறப்பட்டுச் சென்ற நிலையில், இன்று 936 பெண்கள், 3,759 ஆண்கள் என 223 வாகனங்களில் பகவதி நகர் முகாமில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மூன்றாவது குழு புறப்பட்டுள்ளது.
பஹல்காம், பல்தால் ஆகிய வழிப் பாதைகளில் இவர்கள் செல்வார்கள். சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 15ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
திங்கட்கிழமை மாலை வரை 8,403 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.