தேசிய மருத்துவர்கள் தினம் மற்றும் தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான பிதான் சந்திர ராயின் பிறந்த தினமான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்களின் நலனுக்கும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நேரகாலம் பார்க்காமல் கடினமாக உழைத்து வரும் மருத்துவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நலனைப் பாதுகாப்பதில் மருத்துவர்களின் பங்களிப்புக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. இந்நாளில், புகழ்பெற்ற மருத்துவரான பி.சி.ராய்க்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டார்.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி, தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், நிறுவனங்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்த பட்டயக் கணக்காளர்கள் நேர்மையுடன் கடினமாக உழைத்து வருகிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நாளில், பட்டயக் கணக்காளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.