
வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில் 6,735-ஆக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
2018-19ஆம் ஆண்டு வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டதாக கருதப்படும் 6,735 பேர் மூலம் ரூ.2,836 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 9,866 மோசடி நபர்களால் ரூ.4,228 கோடி மதிப்பிலான கடன் பெறப்பட்டுள்ளது.
முன்பு, ஒழுக்கமின்மை காரணமாகவும், கடன் கலாச்சாரம் அதிகரிப்பின் காரணமாகவும் வங்கியில் கடன் பெற்றவர்கள், அதைத் திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. கடன் பெற்றவர்களின் நிதியை முடக்குவது, சொத்துக்களை முடக்கி வைப்பது மற்றும் பறிமுதல் செய்வது போன்றவை வழக்கமான நிகழ்வாக இருந்தது. வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவது, அவர்களது பாஸ்போர்ட் போன்ற விவரங்கள் தெரியாததால் மோசடி நபர்களிடம் இருந்து தொகையை கைப்பற்றுவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. உயர்மதிப்பிலான மோசடியில் ஈடுபடுபவர்கள் எளிதில் தப்பி விடலாம் என்று எண்ணுவதன் அடிப்படையிலேயே மோசடியின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
வங்கியாளர்களும், மோசடியாளர்களிடம் இருந்து கடன்தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டவில்லை. தற்போதைய அரசின் தீவிர நடவடிக்கையின் காரணமாக, வங்கிகளில் மோசடி நடைபெறுவது படிப்படியாக தடுக்கப்பட்டுள்ளது.
மின்னணு பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே, பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அந்தப் பதிலில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.