
இருபத்தி எட்டு அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலக வர்த்தக அமைப்பின் வரிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், சுங்க வரி போன்று வர்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தும் காரணிகளை களைவது, வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஆகியவையே ஆகும்.
இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பு 28 பொருள்களுக்கு இந்தியா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இத்தகைய வரியை இந்தியாவால் விதிக்க இயலாது. இது உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்த விதிகளுக்கு எதிரானதாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வரி விதிப்புத் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகள் புகார் அளிக்கும். அதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்படி கேட்டுக் கொள்ளப்படும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசமும் அளிக்கப்படும்.
இந்த அவகாசம் முடிவடைந்ததும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லையெனில், உலக வர்த்தக அமைப்பு விசாரணை நடத்தும்.
வர்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா அதிகாரிகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜிஎஸ்பி திட்டத்தின்படி இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட், போரிக் ஆசிட் உள்ளிட்ட 28 பொருள்களுக்கு இந்தியா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் 47.9 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவில் இருந்து 26.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால் இரு நாடுகளிடையேயான வர்த்தகம், இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.