காங்கிரஸைத் தொடர்ந்து அனைத்து மஜத அமைச்சர்களும் ராஜிநாமா: விரைவில் அமைச்சரவை மாற்றம்

கர்நாடகாவில் 21 காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த நிலையில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர்.
காங்கிரஸைத் தொடர்ந்து அனைத்து மஜத அமைச்சர்களும் ராஜிநாமா: விரைவில் அமைச்சரவை மாற்றம்


கர்நாடகாவில் 21 காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த நிலையில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி எம்எல்ஏ-க்கள் 13 பேர் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக அங்கு மிகப் பெரிய அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. ராஜிநாமா செய்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர். 

இதனால், கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் ஆட்சியை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் கர்நாடகா விரைந்தனர். வெளிநாடு சென்றிருந்த முதல்வர் குமாரசாமி, தனது பயணத் திட்டத்தை பாதியில் ரத்து செய்து கர்நாடகா திரும்பினார். இரண்டு கட்சித் தலைவர்களும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.  

இந்தச் சூழலில் கடந்த மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ், இன்று தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அவர் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், மாநிலத்தின் நலனுக்கா பாஜக-வுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரும் மும்பையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இருக்கும் அதே விடுதியில் தான் உள்ளார். 

இதுபோன்ற அடுத்தடுத்து நெருக்கடிகள் காரணமாக குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை தக்கவைக்க காங்கிரஸ் அமைச்சர்கள் 21 பேரும் தங்களது பதவியை தாமாக முன்வந்து ராஜிநாமா செய்தனர்.

இந்த வரிசையில், தற்போது மஜத அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனவே, அம்மாநிலத்தின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் பலம் 2 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவு உட்பட மொத்தம் 119 ஆக இருந்தது. அதேசமயம், பாஜகவுக்கு 105 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். அங்கு ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை 113 ஆகும். ஆனால், ஆளும் கூட்டணி அரசின் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில் தற்போது அவர்களது பலம் 105 ஆக குறைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் விரைவில் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதை தடுக்கும் முயற்சியாகவே காங்கிரஸ் மற்றும் மஜத அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com