தனியார் ஆபரண மாளிகை மோசடி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்சம் வாங்கியதாக, மாவட்ட ஆட்சியர் விஜயசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள தனியார் ஆபரண மாளிகையில் முதலீட்டாளர்களுக்கு மோசடி நடைபெற்றதையடுத்து, வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை செய்து, அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பெங்களூரு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் பி.எம்.விஜயசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை குற்றம்சாட்டப்பட்ட முகமது மன்சூர்கான், அவரது ஆபரண மாளிகைக்கு ஆதரவாகத் தாக்கல் செய்ய விஜயசங்கர் ரூ. 1.5 கோடி லஞ்சம் வாங்கியதாகச் சிறப்புப் புலனாய்வுப் படையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜயசங்கரை சிறப்புப் புலனாய்வுப் படையினர் கைது செய்தனர்.