அயோத்தி வழக்கில் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை: சமரசக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கில் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை: சமரசக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கில் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யுமாறு சமரசக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


புது தில்லி: அயோத்தி வழக்கில் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யுமாறு சமரசக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமரசக் குழு சரியாகச் செயல்படவில்லை என இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 4 வார அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அது மிக அதிகக் காலமாக இருக்கும் என்று கருதி, வரும் வியாழக்கிழமை இடைக்கால அறிக்கை தாக்கல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமஜென்மபூமி - பாபர் மசூதி நில விவகார வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஏற்கெனவே கடந்த மே மாதம் தங்கள் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பந்தப்பட்டவர்களுடன் இக்குழு 8 வாரங்களில் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கோபால் சிங் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ். நரசிம்மா, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மத்தியஸ்தர்களை நியமித்த பிறகும் அயோத்தி நில விவகார வழக்கில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 

இதனைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மனுவை விசாரித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பும்... எதிர்ப்பும்...: முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை நடைபெற்றது. அப்போது, இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க உள்ளோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மத்தியஸ்தர் குழு கடந்த மே மாதம் தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மத்தியஸ்தர் குழுவுக்கு கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com