விஜயவாடா: தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை விசாரித்த அமலாக்கத் துறை அதிகாரிக்கு எதிராக காய்நகர்த்தி அவருக்கு செக் வைத்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பல அதிரடி சோதனைகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை அதிகாரி ஸ்ரீனிவாச காந்தியின் வீட்டிலும் சோதனை நடத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஸ்ரீனிவாச காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.3.74 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தனர். சுமார் 13 ஆண்டு காலம் அமலாக்கத் துறையில் பணியாற்றும் காந்தி, ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017ம் ஆண்டு, தனக்கு எதிராக ஸ்ரீனிவாச காந்தி உட்பட அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது முதல்வராகியிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, தனக்கு எதிராக செயல்பட்ட காந்திக்கு எதிராக காய்நகர்த்தி அவருக்கு செக் வைத்துள்ளார்.
காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையில், 2004ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அமலாக்கத் துறையில் ஸ்ரீனிவாச காந்தி பணியாற்றியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவர் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் ஏராளனமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக கூறப்பட்டுள்ளது.