16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழும் நிலையில், நான் எதற்காக பதவி விலக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் முதல்வர் குமாரசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, குமாரசாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ஏன் நான் பதவி விலக வேண்டும்? நான் பதவி விலக வேண்டியதன்அவசியம் என்ன? என்பதே குமாரசாமியின் கேள்வி.
மேலும் அவர் பேசுகையில், கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கள் அரசு கவிழ்க்கப்படாது. கடந்த காலங்களை விட தற்போதைய சூழல் இக்கட்டானதாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (13 எம்எல்ஏக்கள்) மற்றும் மஜத (3 எம்எல்ஏக்கள்) எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால், கூட்டணி ஆட்சியின் பெரும்பான்மை பலம் குறைந்துள்ளது.
இது குறித்து குமாரசாமி கூறுகையில், 2009 - 10ம் ஆண்டில் பாஜக ஆட்சியின்போது சில அமைச்சர்கள் உட்பட 18 எம்எல்ஏக்கள் அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பாவை எதிர்த்தனர். ஆனால், அப்போது அவர் பதவி விலகவில்லையே என்று கேள்வி எழுப்பினார்.