தில்லியில் பெண்கள் கட்டணமில்லாமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் உத்தேசத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குரைஞர் விபின் பிகாரி சிங் தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், தில்லியில் பெண்களுக்கு தில்லி அரசு முன்மொழிந்துள்ள கட்டணமில்லா மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். தில்லி மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். தற்போதுள்ள 6 படி முறைவீதக் கட்டணத்தை, 15 படி முறைவீதக் கட்டணமாக மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பாடீல், சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், "இந்த மனுவில் விசாரிப்பதற்கு எந்தவித சாரம்சமும் இல்லை' எனத் தெரிவித்து தள்ளுபடி செய்தததுடன், மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
தில்லி சட்டப்பேரவை அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, பெண்கள் தில்லி மெட்ரோ, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் உத்தேசத் திட்டத்தைக் கடந்த ஜூனில் அறிவித்தது. இந்தக் கட்டணத்தை தில்லி அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் முதல்வர் கேஜரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.