பிரபல வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் இல்லத்திலும் அவரது கணவர் நடத்திவரும் அரசு சாரா அமைப்பின் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:
வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கின் இல்லத்திலும், அவரது கணவர் ஆனந்த் குரோவர் நடத்திவரும் அரசுசாரா அமைப்பின் மும்பை அலுவலகத்திலும் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஆனந்த் குரோவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த இந்திரா ஜெய்சிங்கின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. இருப்பினும், உள்துறை அமைச்சகம் அளித்த புகாரில் இந்திரா ஜெய்சிங்குக்கும் விதிமீறலில் பங்கு இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
2006-2007 மற்றும், 2014-2015 காலகட்டங்களில் ரூ.32.39 கோடி நிதி முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை ஆனந்த் குரோவரின் அரசுசாரா அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திரா ஜெய்சிங்கும், என்ஜிஓ அமைப்பும் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் விசாரணையில் முன்னாள் உச்சநீதிமன்ற பெண் அலுவலருக்கு ஆதரவாக ஆஜரானதாலும், மனித உரிமைகளுக்காக பாடுபட்டு வருவதாலும் பழிவாங்கப்படுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.