பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்து கடன் பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.24.77 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மெஹுல் சோக்சிக்கு துபையில் உள்ள சில சொத்துகள், பென்ஸ் கார், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சில வங்கிகளில் வைத்திருந்த நிரந்தர வைப்பு நிதி ஆகியவற்றையும் சேர்த்து ரூ.24.77 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்த சொத்துகளுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.2,534 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோசடி தொடர்பாக தொழிலதிபரும், மெஹுல் சோக்சியின் உறவினருமான நீரவ் மோடிக்கு எதிராகவும் அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நீரவ் மோடியும், மெஹுல் சோக்சியும் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் உள்ளார். சர்வதேச போலீஸாரின் உதவியுடன் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்டிகுவா அரசிடமும் அவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரியுள்ளது.