ராஜிநாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 5 கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணியின் 16 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். அதேசமயம், இவர்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்வதால், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக்கோரி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து, எம்எல்ஏ-க்கள் மீண்டும் ராஜிநாமா கடிதம் அளிக்க வேண்டும் என்றும், ராஜிநாமா கடிதங்கள் மீது ஒரே நாளில் முடிவெடுக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதன்படி, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீண்டும் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.
இதன்பிறகு, இந்த வழக்கானது மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் 16-ஆம் தேதி வரை இப்போதைய நிலையே தொடர வேண்டும். எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது, ராஜிநாமா கடிதஹ்களை ஏற்பது அல்லது நிராகரிப்பது என எந்த முடிவையும் எடுக்கக் கூடாது" என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்க மறுக்கும் சபாநாயகருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கெனவே 10 எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அத்துடன் இந்த மனுவையும் இணைக்க அவர்கள் கோரியுள்ளனர்.
தற்போது வழக்கு தொடர்ந்துள்ள 5 அதிருப்தி எம்எல்ஏ-க்கள்:
ஆனந்த் சிங், கே சுதாகர், என் நாகராஜ், முனிரத்னா மற்றும் ரோஷன் பைக்.