பனாஜி: கோவா அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களான சந்திரகாந்த் கவ்லேகர், ஜெனிஃபர், ஃபிலிப்பே நேரி ரோட்ரிஜியஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ ஆகியோர் இன்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் கடந்த புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
கோவாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட ஏதுவாக, பாஜக கூட்டணி கட்சியான கோவா முன்னணி கட்சியைச் (ஜிஎஃப்பி) சேர்ந்த மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து விலகுமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததால், அமைச்சரவையில் இருந்து மூன்று பேரையும் நீக்கி நடவடிக்கை எடுத்தார் முதல்வர். அதேப் போல சுயேச்சை எம்எல்ஏவான ரோஹன் கெளந்த்தேவும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது பாஜகவை சாராத எம்எல்ஏவான கோவிந்த் கௌடே மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
ஜிஎஃப்பி கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், வினோத் பாலிகர் மற்றும் ஜெய்ஷ் சல்கோன்கர் ஆகிய மூன்று பேரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர்களாவர்.
இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர், தற்போது பிற கட்சிகளில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைவதுதான் தேசிய அளவில் டிரெண்டாக உள்ளது என்று கூறினார்.