ஈரான் எண்ணெய் டேங்கர் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 இந்தியர்களுக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிரியாவுக்கு எண்ணெய் டேங்கர் எடுத்துச் செல்ல ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தடையை மீறி ஈரானிலிருந்து சிரியாவுக்கு எண்ணெய் டேங்கர் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி அந்தக் கப்பலை எல்லை பாதுகாப்புப் போலீஸார் சிறைபிடித்தனர். அந்தக் கப்பலில் 4 இந்திய ஊழியர்களும் இருந்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் எல்லைக் காவல் பிரிவு செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "எண்ணெய் டேங்கர் கொண்டு வந்த கிரேஸ் 1 கப்பல் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தக் கப்பலில் கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 4 பேரை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவித்தது' என்றார்.
4 இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்தது.
முன்னதாக, எண்ணெய் டேங்கரை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அந்த எண்ணெய் டேங்கர் சிரியாவுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்தது.