ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்திலிருந்து துபைக்கு நேரடி விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாலும், தொழில் முதலீடு உயர்ந்துள்ளதாலும் ஒடிஸா விமானப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளேன்.
பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ஒடிஸாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க ஆர்வத்துடன் உள்ளன.
புவனேசுவரத்தில் சர்வதேச விமானங்கள் தரையிறங்குவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பது, விமான சேவை நிறுவனங்களுக்குத் தடையாக உள்ளது. துபை உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்வதற்கு மக்களும் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். புவனேசுவரத்திலிருந்து துபைக்கு செல்வதற்கு நேரடி விமான சேவை வழங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம் என்றார் நவீன் பட்நாயக்.