உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு ஸ்தூபிகளில் ஒன்றை சீரமைக்கும் பணிகள் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள 4 ஸ்தூபிகளில் ஒன்று மிகவும் சிதிலமடைந்ததையடுத்து அதனை சீரமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்பு துவக்கப்பட்டன. இந்தப் பணிகளை கண்காணித்து வரும் அமர்நாத் குப்தா சனிக்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: ஸ்தூபியில் இருந்த சில கற்கள் மாற்றப்பட்டுள்ளன. கருப்பு கல் லைனிங் சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்தூபிக்கு எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. சீரமைப்பு பணிகளுக்காக சாரங்கள் அமைக்கப்பட்டு கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு விடும். உலக சுற்றுலா தினத்துக்கு முன்னதாகவே பணிகள் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
முன்னதாக, இந்த சீரமைப்பு பணிகள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர் வசந்த் ஸ்வார்ன்கர் கூறுகையில், " இது வழக்கமாக மேற்கொள்ளும் பழுது நீக்க வேலை அல்ல ஆனால் தனித்துவம்மிக்க ஒரு பணி' என்றார்.
யமுனை நதிக்கரையையொட்டி 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலகளவில் காதலின் சின்னமாக போற்றப்பட்டு வருகிறது.