நாட்டிலேயே மிகவும் தூய்மையாக இருக்கும் நாடாளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் பாஜக எம்.பி.க்கள் எதற்காக இறங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா கிண்டலாகத் தெரிவித்தார்.
"தூய்மை இந்தியா' திட்டத்தை நாடாளுமன்றத்துக்குள் செயல்படுத்தும் விதமாக, பாஜக எம்.பி. ஹேமமாலினியும், அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.க்களும் துடைப்பத்துடன் தரையைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது விடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. துடைப்பம் தரையில் கூட படாமல் தூய்மை செய்வது போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், ஒமர் அப்துல்லா சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டிலேயே மிகவும் தூய்மையாக இருக்கும் இடம் நாடாளுமன்ற வளாகம். அங்கு தற்போது கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் நாடாளுமன்ற வளாகத்தின் உட்புறமும் தூய்மையாகவே இருக்கும். துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்வது எப்படி என்பதை ஹேமமாலினி பயிற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு, புகைப்படத்துக்காக கேமரா முன்பு நிற்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.