நேர்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை பி-பேக் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
அண்மைக் காலமாக கர்நாடக அரசியலில் நடைபெறும் நிகழ்வுகள் வேதனை அளிப்பதாக உள்ளன. ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், பதவிக்காகவும், பணத்துக்காகவும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, வேறு கட்சிக்குச் செல்வது மோசமான அரசியலை எடுத்துக் காட்டுகிறது. எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், இது போன்றதொரு மோசமான அரசியல் நிகழ்வைப் பார்த்தது இல்லை. எனது காலகட்ட அரசியலின்போது, கட்சிகளின் சிந்தாந்தம், கொள்கையில் பிடிப்போடு இருந்தோம். ஆனால், தற்போதைய அரசியலில், பணம், ஜாதி முக்கிய பங்களிப்பை வகிக்கின்றன. பெரும்பாலான கட்சிகளில் தேர்தலில் போட்டியிட மகளிருக்கு வாய்ப்பளிப்பதில்லை. மகளிருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் அவர்கள் அரசியலில் முன்னேறுவது சாத்தியமாகாது.
மாறி வரும் அரசியல் சூழலில் நேர்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகளும் நேர்மை, நிலையான கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே, கெளரவமும், மரியாதையும் கிடைக்கும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பி-பேக் அமைப்பின் தலைவர் கிரண் மஜும்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.