பொது இடத்தில் சிறுநீர் கழித்த வாலிபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.
தில்லி புறநகர் பகுதியான திலக் நகர் பகுதியில் அங்கீத் என்பவர் தனது மொபைல் ஃபோனை பழுது நீக்க அங்கிருந்த கடை ஒன்றில் அளித்துள்ளார். அப்போது அருகிலிருந்த இடமொன்றில் சிறுநீர் கழித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் அவரை அந்த இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ரவியின் நண்பர்கள் அங்கே கூடியுள்ளனர். அப்போது பொது இடத்தில் அங்கீத் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரவியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, கடைக்குச் சென்ற அங்கீத்தை காணவில்லை என தேடியதாக அவரது சகோதரர் போலீஸாரிடம் கூறியுள்ளார். மேலும், மக்கள் கூட்டமாக இருந்ததைக் கண்டு அங்கு சென்று பார்த்தபோது அங்கீத் தாக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கீத் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.