சிறப்பான சேவைகளை பொதுமக்கள் பெற வேண்டும் எனில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கான மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் பங்கேற்றஅவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
தரமான சாலை வசதிகள் வேண்டுமெனில் பொதுமக்கள் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும். சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை இன்னும் அமலில் இருப்பது அரசிடம் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
மத்திய அரசு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் 40,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகளை கட்டமைத்துள்ளது என்றார் அவர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.
அவர்களுக்கு, கட்கரி பதிலளித்து பேசுகையில், பணம் செலுத்தும் திறனுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம் கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது.
நல்ல சேவை கிடைக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆக வேண்டும். அரசிடம் அதுபோன்ற திட்டங்களுக்கான பணம் இல்லை. கட்டண விகிதங்கள் மாறுபடும் என்றாலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறைக்கு முடிவென்பது கிடையாது.
சாலைப் பணி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் என்பது மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது.
மாநில அரசுகள் அதற்கான தீர்வுகளை தந்து உதவ வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு சாலை வசதி மிக முக்கியம் என்றார்.