பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக சட்டப்பேரவையில் வியாழனன்று குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு முன்னதாக அவையில் உருக்கமாக பேசிய முதல்வர் குமாரசாமி, 'ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்' என்று பேசினார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாக்கெடுப்பிற்காக அவை கூடியதும் எழுந்த காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் சிவக்குமார் தங்கள் கட்சி எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜகவினர் கடத்தி விட்டனர் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவரது புகைப்படத்தை காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
அதேசமயம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று காங்கிரசின் சித்தராமையா வேண்டுகோள் வைத்தார்.
இறுதியாக காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியின் காரணமாக சபை அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி கர்நாடக ஆளுநருடன், ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான பாஜகவினர் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அத்துடன் மற்ற விஷயங்களை அவையில் விவாதிக்கக் கூடாது எனவும் ஆளுநரிடம் குழுவினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று பேரவை சபாநாயகருக்கு மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
தனது சிறப்பு அதிகாரி ஒருவர் மூலம் இந்த தகவலை ஆளுநர் பேரவை சபாநாயகருக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.