"இந்தியாவுடன் பாதுகாப்பு ரீதியிலான உறவு வலுவாக உள்ளது; அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்' என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை துருக்கி வாங்கியது. ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட காரணத்தால், அமெரிக்கா தயாரித்த எஃப்-35 ரக போர் விமானங்களை துருக்கிக்கு அமெரிக்கா விற்காது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவும் ரூ. 40 ஆயிரம் கோடி அளவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதனால் இந்தியாவுக்கும் இதுபோன்ற தடைகளை அமெரிக்கா விதிக்குமா?, இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்புத் துறை உறவில் பாதிப்பு ஏற்படுமா? என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை துணை செயலர் டேவிட். ஜே. டிரசென்பெர்க் கூறியதாவது:
எங்களது 5-ஆம் தலைமுறை போர்விமானங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளை எந்த நாடும் வாங்கக்கூடாது என்று நாங்கள் ஏற்கெனவே தெளிவாக தகவல் அனுப்பி விட்டோம். ஆனால், துருக்கி, ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகள் பெற்றது துரதிருஷ்டவசமானது.
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை பெற்றால், எஃப்-35 போர் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிடைக்காது என ஏற்கெனவே துருக்கி அரசுக்கு பல முறை அறிவுறுத்தியிருந்தோம்.
துருக்கிக்கு எதிரான எங்களது நடவடிக்கை குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டுமே. உலகின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக துருக்கியுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது. அதற்கும், இந்த நடவடிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
துருக்கி மற்றும் அமெரிக்காவின் ராணுவ படைகள் இணைந்து கடந்த காலத்தில் கூட்டு பயிற்சிகள் மேற்கொண்டன. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. அமெரிக்கா தொடர்ந்து துருக்கியுடன் நல்ல உறவில் இருக்கும்.
எங்களது எஃப்-35 ரக போர்விமானத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டாளிகளுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம். இந்தியாவுடன் பாதுகாப்பு ரீதியிலான உறவு வலுவாக உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.