விமானப் பயணிகள் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்தீப் சிங் புரி பேசியதாவது:
2019-20 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையின் பல்வேறு பிரிவுகளில் ஏற்கெனவே 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. தற்போது பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் ஆகியவற்றிலும் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் 100 நாள் திட்டம், 5 ஆண்டு இலக்குகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. "ஏர் இந்தியா' நிறுவனத்தில் மத்திய அரசின் முதலீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படாததால், விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விமானப் பயணத்துக்கான கட்டணத்தை உயர்த்துவது, இதற்குச் சரியான தீர்வாக இருக்காது. விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ), அதன் பணிகளைச் செம்மையாகச் செய்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது எனப் பொது இயக்குநரகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன். விமானப் பயணத்தின்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு, டிஜிசிஏ தகுந்த தீர்வுகளைக் காண வேண்டும் என்றார் ஹர்தீப் சிங் புரி.