ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மென்தார் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்களின் இந்த செயலுக்கு இந்திய ராணுவத் தரப்பிலிருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்துவது நிறுத்திக் கொள்ளப்பட்டது. இதனால், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தெரியவில்லை.
இருப்பினும், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதில் பலோனி கிராமத்தைச் சேர்ந்த ஜபர் உல்லாஹ் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.