உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலத்தகராறால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற பிரியங்காவை போலீஸார் தடுத்து நிறுத்திய விவகாரத்தை மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் சட்டப் பேரவை சனிக்கிழமை கூடியது.
அப்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மாநில அமைச்சர் ஜீது பத்வாரி தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பினர். இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்களுக்கும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அவையை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு பேரவைத் தலைவர் பிரஜாபதி வலியுறுத்தினார்.
மற்றொரு மாநில அமைச்சர் ஓம்கர் சிங் மார்கம், பழங்குடியினரை பாஜக துன்புறுத்தி கொலை செய்கிறது என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து, அவையில் தொடர்ந்து அமளி நீடித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருடன் விவாதிப்பதாக பிரஜாபதி உறுதியளித்தார்.
எனினும், தொடர்ந்து அமளி நீடித்ததை தொடந்து, 5 நிமிடம் வரை அவையை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.