ஜம்மு-காஷ்மீரில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்கு பெல்லட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரிய பொது நல மனு குறித்து 6 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு அந்த மாநில உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அரசுக்கு எதிராக, அங்குள்ள இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடும்போது, அவர்களைக் கலைக்க ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்படும் பெல்லட் ரக துப்பாகிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ரக துப்பாக்கியால் பலர் படுகாயமடைந்ததாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
அதையடுத்து பெல்லட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் பார் கவுன்சில் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. அதனால் இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் காஷ்மீர் உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் அல்லது தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.