வெளிநாட்டு சொத்து விவரங்கள்: மல்லையா வெளியிட பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடுகளில் தனக்குள்ள சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
வெளிநாட்டு சொத்து விவரங்கள்: மல்லையா வெளியிட பிரிட்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு


இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடுகளில் தனக்குள்ள சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
முன்னதாக, மல்லையாவுடன் தொடர்புடைய பல்வேறு சொத்துகளின் உரிமையாளர் குறித்த தகவல்களை வெளியிடக் கோரி இந்திய பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
மல்லையாவின் தந்தை பெயரிடப்பட்டுள்ள விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் உரிமையாளர் யார் என்பது குறித்த முக்கிய ஆவணத்தை வெளியிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது. 
இரண்டு சொகுசு படகுகள், விலையுயர்ந்த பழங்கால கார்கள், விலையுயர்ந்த ஓவியங்கள், பிரபல இசையமைப்பாளர் எல்டன் ஜான் பயன்படுத்திய பியானோ இசைக்கருவி உள்ளிட்ட சொத்துகள் மல்லையாவின் பெயரில் இருப்பதாக இந்திய வங்கிகள் கருதுகின்றன. 
எனினும், இந்த சொத்துகள் தனது குடும்பத்தினர் பெயரிலும், விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் பெயரிலும் இருப்பதாக மல்லையா கூறி வருகிறார். அதேபோல், விஎம்டிஎஸ் அறக்கட்டளையில் இருந்து தனக்கு எந்தவொரு நிதிப் பலனும் கிடைக்கப்பெறுவதில்லை என்றும் மல்லையா கூறிவருகிறார். 
இந்நிலையில், இந்திய வங்கிகளின் மனு மீது நீதிபதி ராபின் நோவெல்ஸ் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, இந்திய வங்கிகளின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிகெல் டோஸி, முன்வைத்த வாதம்: 
மல்லையாவுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பாக இந்திய நீதிமன்றங்களிலும், பிரிட்டன் நீதிமன்றத்திலும் முழுமையான தகவல் சமர்ப்பிக்கப்படவில்லை. வழக்கில் தொடர்புடைய மல்லையாவின் சொத்துகளில் பல விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அறக்கட்டளை மல்லையாவின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையது. 
விஎம்டிஎஸ் அறக்கட்டளையின் உரிமையாளர் யார் என்பதற்குத் தகுந்த பதில் கிடைக்கப்பெறவில்லை. அதுதொடர்பான இந்திய வங்கிகளின் கேள்விகளுக்கு கிடைத்த பதில் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன என்று வழக்குரைஞர் நிகெல் டோஸி வாதாடினார். 
அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ராபின் நோவெல்ஸ், மல்லையாவோடு தொடர்புடைய சொத்துகளின் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறியும் உரிமை இந்திய வங்கிகளுக்கு உள்ளது. அது குறித்த தகவலை வெளியிடாதது மனுதாரருக்கான (இந்திய வங்கிகள்) அநீதியாகிவிடும். எனவே, மல்லையா தனது வெளிநாட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com