புது தில்லி: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் புதனன்று நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட்டது.
சைபர் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளையும் தேசிய விசாரணை ஆணையம் விசாரிக்க இந்த சட்டத்திருத்தம் அனுமதி அளிக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 4-வது அட்டவணையில் செய்யப்பட்டுள்ள திருத்தமானது, பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை விசாரிக்க என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறது.
முன்னதாக, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.