புது தில்லி: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு பின் நாடாளுமன்றம் ஜூன் 17-ஆம் தேதியன்று முதன்முறையாக கூடியது. அந்த கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதி முடியும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு நிறைவேற்ற விரும்பும் முக்கிய மசோதாவான முத்தலாக் தடை மசோதா அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டு காலாவதியாகியுள்ளது. தற்போது அதனை நிறைவேற்றி விட பாஜக தீவிரம் காட்டுகிறது. அதன் முதல்கட்டமாக மக்களவையில் மசோதா வியாழனன்று நிறைவேற்றியுள்ளது.
அடுத்து அதனை மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றி விட வேண்டும் என்று மத்திய அரசு ஆர்வம் காட்டுவதால், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நீட்டிக்கலாம் என தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.