மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 1.5 கிலோ நகை மற்றும் காசுகள் அகற்றப்பட்டது. மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்புராத் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்புகொண்ட மொத்தம் 90 காசுகள் மற்றும் தங்கம் உள்ளிட்ட உலோகங்களால் ஆன காதணி, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட 1.5 கிலோ எடை கொண்ட ஆபரணங்கள் வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர் சித்தார்த் பிஸ்வாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் கூறுகையில், வீட்டில் இருந்து ஆபரணங்கள் மற்றம் காசுகள் தொடர்ந்து மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து எனது மகளிடம் கேட்டால் அவர் அழத்தொடங்கிவிடுவார். மேலும் சமீபகாலமாக ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடவுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீசத் தொடங்கினார்.
கடந்த 2 மாதங்களாக இப்போக்கு அதிகரித்தது. மகளின் உடல்நிலை தொடர்பாக பல மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் எந்த பலனும் இல்லை. தொடர்ந்து கண்காணித்தும் வீட்டிலிருந்த ஆபரணங்கள் மற்றும் காசுகள் மாயமானதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கடந்த ஒருவாரமாக முழு மருத்துவப் பரிசோதனை செய்த போது எனது மகளின் வயிற்றில் அவை இருப்பது தெரியவந்தது என்றார்.