2024-ல் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவது தான் மத்திய அரசின் இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ரூ.65 ஆயிரம் கோடி மதிப்பிலான 250 நலத்திட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
இது உத்தரப் பிரதேசத்தின் 2-ஆவது மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும். உலகளவில் 11-ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த 5 ஆண்டுகாளில் 5-ஆவது இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றியுள்ளார். 2024-ல் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும். இதுதான் பிரதமர் மோடியின் இலக்கு.
நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக இந்த திட்டங்களின் மூலம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக பொருளாதாரத்தை உருவாக்க முடியும். மேலும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மற்றும் அதிக பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உ.பி. உயரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கில் பல்வேறு மாறுதல்களைச் செய்து முதலீட்டாளர்களுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.