
சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை (ஆக.2) விசாரிக்கவுள்ளது.
மல்லையா சார்பில் மூத்த வழக்குரைஞர் எஃப்.எஸ்.நாரிமன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மல்லையாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பாக நிலுவையில் உள்ள வேறு வழக்குடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மனு மீதான விசாரணையை சற்று ஒத்திவைக்க வேண்டும் என்று மல்லையாவின் வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை, வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின்கீழ், மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளராக கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அந்தச் சட்டத்தின்கீழ், அவரது சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அந்த நீதிமன்றம் தொடங்கியது.
இதையடுத்து, அந்தச் சட்டத்துக்கான அங்கீகாரத்தை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மல்லையா மனுவொன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனது சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை மல்லையா கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவொன்றை மல்லையா கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில், தனது நிறுவனம் மற்றும் தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சொத்து முடக்க நடவடிக்கையின்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைத் தவிர வேறு எந்த சொத்துகளையும் பறிமுதல் செய்யக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வரும் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.