கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றத்தை எதிர்த்து அளித்த புகாரை ஏற்க போலீஸார் மறுப்பதாக பிரபல போஜ்பூரி நடிகை அலினா ஷேக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அலினா கூறுகையில், இரவு 8 மணிக்கு வீடு திரும்புவதாகக் கூறி வெளியே சென்ற எனது கணவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எனவே அவரை காணவில்லை என்று நான் போலீஸில் புகார் அளித்தேன். பின்னர் அவர் நலமுடன் இருப்பதை அறிந்துகொண்டேன். ஆனால், சரியாக 10 நாட்கள் கழித்து அதாவது ஜூலை 17-ஆம் தேதி எனக்கு ரூ.100 முத்திரைத்தாளில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.
இந்த விவாகரத்தை என்னால் ஏற்க முடியாது. இதுதொடர்பாக புகார் அளித்தால், போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது முதல் எனது கணவரின் வீட்டில் கொடுமைப்படுத்தி வந்தார்கள். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கக் கூடாது என்று எனது கணவர் தடுத்துவிட்டார் என்று தெரிவித்தார்.
கடந்த 2016-ல் முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை அலினா ஷேக் தம்பதிக்கு 2 மாத குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.