புது தில்லி: தேசிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு நதிநீர் தொடர்பான எல்லா விவகாரங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கவனிக்கும் வகையில், ஜல்சக்தி என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. கஜேந்திர சிங் அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து நாடு முழுவதும் வெவேறு மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான மசோதாவை, ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதுதொடர்பான விவாதத்தில் பேசியபோது அவர் கூறியதாவது:
நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும்
நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.